Tuesday, February 27, 2018

சோசலிச இயக்கத்தை மழுங்கடிக்கிற கருத்துவெளி அதிகாரப் படிநிலைகள்

நான் ஏதோ 'பூட்டிய அறைக்குள்' இருந்து கொண்டு வெற்றுக் கருத்துக்களை, கற்பனைகளை எழுதுவதாக பல தோழர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

என்னை லேகியம் விற்பவன், அக நிலைக் கருத்துமுதல்வாதி, பின்னவீனத்துவாதி, குட்டி முதலாளியவாதி, சாய்மனைக்கதிரை அறிவு சீவி என்றெல்லாம் மேம்போக்காகச் சொல்லிக் கொண்டிருப்பதால் பயனில்லை .

எங்கே என்னைத் தோழர் என்று அழைத்தால் தமது 'அறிவு' அதிகார வெளி பாதிக்கப்படுமோ என்று அஞ்சுகிற 'தோழர்களையும்' கடந்து வருகிறேன்.

கனக்கவெல்லாம் வேண்டாம், என்னுடைய இயங்கியல் அறிவைக் கொண்டு எட்டு மணிநேர வேலையை மூன்று நான்கு மணி நேரத்தில் முடித்து விட்டு எழுதிக் கொண்டிருப்பவன் நான். நான் எழுதுவதற்காக நான் என்னுடைய தனிப்பட்ட, குடும்ப நேரத்தைச் சுரண்டுவதில்லை.

நான் ஒப்பந்த அடிப்படையில் புலம்பெயர்ந்து வேலை செய்கிற மாசக் கூலி. என்னிடம் எட்டு அல்ல, பத்து மணி நேர வேலையை எதிர்பார்க்கிறார்கள்.

என்னுடைய சேவையை விற்கிற 'முதலாளி' நான். தொழிலாளி அல்ல என்கிறது 'ஒப்பந்த அடிப்படையின்' தத்துவம்.

இவற்றையெல்லாம் திமிறி நான் மிகத் தெளிவான சோசலிஸ்டாக இருக்கிறென்.

எல்லா முனைகளிலும், நடைமுறை வாழ்வியலிலும் இயங்கியல் அறிவைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிற என்னை 'கற்பனையில்' வாழ்வதாக இவர்கள் குற்றஞ் சுமத்துவது பொருத்தமற்றது.

என்னுடைய அறிவு எனக்கு வலிந்து தருகிற அதிகாரத்தை மிகக் கவனமாக உடைத்து, எனக்கான பின் தொடரிகள், என்னிடம் ஆலோசனை கேட்கிறவர்களை விரட்டுவதற்காக என்னுடைய அறிவைப் புறவயப்படுத்தி சட்டகம் போட்டுக் கொண்டிருப்பவன் நான்.

என்னுடைய அறிவு தருகிற அதிகாரத்தை உடைக்க நான் புறவயப்படுத்துகிற வேகம் அதிகமாக இருக்க வேண்டும். அதையும் நான் மிக விரைவில் எட்டி விடுவேன்.

அப்பொழுது மட்டுந்தான் நான் சோசலிச மனநிலையாளன். அல்லது நானும் ஒரு போலி.

எல்லாவித அதிகாரத்துக்கு எதிரானவர்கள் 'தோழர்கள்' என்று வாய்வார்த்தைக்குச் சொல்லுகிறவர்கள் என்னைத் தோழர் என்று அழைக்க விரும்பாமையை என்னவென்பது? இதில் எனக்கென்ன இழப்பு.

கடவுளைக் காண வேண்டும் என்று தினசரி பிரார்த்தனை செய்கிறவர்கள் கடவுளை உண்மையில் கண்டால் நடுங்கிச் சரிவது போல (கடவுள் ஒரு கற்பிதம்) நாள் தோறும் இடதுசாரி, சோசலிசம், தோழர் என்று அடுக்கிக் கொண்டிருப்பவர்கள்,

நிசமான சோசலிச மனநிலையைக் கண்டவுடன் பதறுவதும் பதுங்குவதும், புறக்கணிப்பதும், தோழர் எனத் தவறியும் அழைக்கக் கூடாதென்பதில் தெளிவாயிருப்பதுவும் நகைப்புக்குரியது.



தோழர்களுடன் நல்லதொரு உரையாடல்.கோர்வையாகப் பகிர்ந்து வைக்கிறென்.

//தோழர். உறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணி சிறப் பாக விளக்குவார். தாங்கள் லெனின் குறித்த விசயத்தை விளக்குங்கள் தோழரே.//
இந்த மனநிலைக்கு எதிராகவே நான் தொடர்ந்து எழுதுகிறேன் தோழர்.

நீங்கள் உங்களுடைய புரிதலை, அது எந்தளவுக்கு குறைபாடுடையதாக இருந்தாலும் உங்களுடைய சிந்தனையை முறையினூடு வெளிப்படுத்த முயல வேண்டும்.

இவ்விதம் இன்னொருவரைச் சார்ந்து இருப்பது கருத்துவெளியிலான அதிகாரப் படிநிலையாக்கம்.

இது சோசலிச மனநிலையாகுமா தோழர்?

பொருள் மூலம் மட்டுமல்ல, பொருளின் அதியுயர் வடிவமான சிந்தனையை (இற்றைத் தேதியில் அதியுயர்) வைத்தும் அதிகாரந் தேடலாம்.
அனைத்து வகை அதிகார இயக்கங்களை அடித்துத்தான் சோசலிசக் கட்டத்தை நோக்கி நகர வேண்டும்.

அவரவர் சுய புத்திச் சட்டகத்தை ஆக்கி திசைக்காக எவரிலும் தங்கியிருக்காதிருக்க வேண்டும். திசையைத் திருத்துகிற தகவல்களுக்குக்காக எதிலும், எவரிலும், அனைத்திலும் தங்கியிருக்க வேண்டும்.
என்னுடைய சிந்தனை பலப்படுகிற பொழுதும் என்னிடம் 'ஆலோசனை' கேட்பதற்கான கூட்டம் பெருகும். நான் விரும்பியோ விரும்பாமலோ அதிகாரம் என்னிடம் குவியும். எனக்கான பொதுவெளி பிம்பம் கட்டமையும்.
இதை உடைக்கிற பொறிமுறையைக் கையாளத்தவறினால் நான் ஒரு சோசலிச மனநிலையாளன் அல்லன். அதிகார விரும்பி.
அதனால்தான் நான் என்னுடைய சிந்தனையை முறையைப் புறவயப்படுத்தி பொதுவில் வைப்பதன் மூலம் என்னைப் பின் தொடர நினைக்கிறவர்கள், கருத்துத் தெளிவுக்காக என்னில் தங்கியிருப்பவர்களை, என்னிடம் 'ஆலோசனை' கேட்பவர்களை நான் வெட்டி விடுகிறேன். விரட்டி அடிக்கிறேன்.
நான் என்னுடைய அறிவைப் பெருக்குகிற வேகத்தை விடவும் புறவயப்படுத்தி என்னுடைய பிம்பத்தை அழிக்கிற வேகம் விஞ்சுகிற பொழுது மட்டுந்தான் நான் சோசலிசவாதி.
அல்லது அந்தப் போலி முகமூடியுடன் அதிகாரத்துக்காக அலைகிறவன் ஆகிறேன்.

// குறிப்பான சூழலில் குறிப்பான முடிவு என்பது தான் சரியான மார்க்சிய வழிமுறை,,,
வெறுமனே தர்க்கவியல் இயங்கியல் பார்வை என்ற கண்ணோட்டம் சரியானது அல்ல,,, //

 குறித்த சூழலில் குறித்த தீர்வுகள் என்று மேம்போக்காகச் சொல்லிக் கொண்டிருப்பது,

1. தான் எவ்விதம் குறித்த சூழலை இனங் கண்டு, அதிலிருந்து குறித்த தீர்வுகளை எடுக்கிறேன், அதற்கான கருவிகள், முறைகள், தத்துவங்கள் என்ன என்று அறியாத மனநிலை

2. அவற்றை அறிந்தால் புறவயமாக்கிப் பொதுவில் வைக்காதது அறிவை வைத்து அதிகாரந் தேடுகிற மனநிலை

அறியாமையும், அதிகார விருப்பும் சோசலிச மனநிலை அல்ல.

// எனது வயது இன்று ஐம்பது,,இன்னும் ஒரு வருடம் கழித்து ஐம்பத்தொன்று,,,பின்னோக்கி இருவருடம் சென்றால் நாற்பத்தெட்டு,,,
ஆக எனது வயது என்பது குறிப்பான சூழலில் மட்டுமே பொருந்தும் அதற்கு மேல் அல்ல,,,அதே போல் லெனினியம் என்பது சரி,,, சென்றால் //

 தோழர், குறித்த சூழமைவு (context), குறித்த பார்வை/தீர்வு என்பது வெளிப்படையானது. உரையாடலுக்கு உகந்ததல்ல.
குறித்த சூழலை இனங் காணுவதும், குறித்த தீர்வை வந்தடைவதற்குமான அணுகுமுறைகள், கருவிகள், சிந்தனைச் சட்டகங்கள் இவையும் இவற்றை முடிந்தளவு பொதுமைப் படுத்தல், புறவயப் படுத்தல், மிகக் குறைவான அடிக்கோள்களில் இருந்து ஆரம்பித்து மிக அதிகமான சூழமைவுகளை எதிர் கொள்ளல் இவை பற்றிய உரையாடலே இது.
உங்களுடைய வயது மாறி வருவதல்ல பிரச்சினை. அது எவ்விதம் மாறுகிறது, எதிர்வு கூறுவது எங்கனம் என்பதைத் துணியவே காலம், அதற்கான அலகுகளை உருவாக்குகிறோம்.
அந்ததந்தக் கால கட்டத்தில் அது அது சரி என்பது சரியான நிலைப்பாடல்ல.

மிகச் சரியானதை செய்ய முடியாததால் முடிந்ததைச் செய்தார்கள் என்பதுவும் சரியல்ல.

ஏன் மிகச் சரியானதைச் செய்ய முடியவில்லை என்று கேள்வி எழுப்பி, குறைபாடுகளை (மனித, தொழிநுட்ப, சிந்தனை அனைத்து) இனங் கண்டு முன்னேற திசையில் நகர்வதே சரியானது.
இந்த நிகழ்வுப் போக்கை மிக நுணுக்கிப் பார்க்க உதவுகிற, மிகப் பரந்த வெளிகளின், சூழமைவுகளினதும் பொதுப் பண்புகளையும் பொது வழிமுறையையும் வளர்த்தெடுக்க முடிகிற இயங்கியலும், அறிவியல், தர்க்க கருவிகளும் அவசியம்.
அவற்றைப் பற்றிய உரையாடலும் அதி முக்கியம்.



லெனின் தொடர்பான விமர்சனம் பற்றிய கேள்விக்கு...

/ /உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுப் போக்கிலே , தாங்களாகவே ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக்கொள்ளும் பேச்சுக்கிடமில்லை.//

நான் எழுதியது இந்தக் கருத்துக்கு எதிராகவே.
லெனின் இந்தக் கூற்றில் சோசலிசத்தையும் முதலாளித்துவத்தையும் ஒரே தட்டில் வைத்திருக்கிறார்.
ஒன்று வரைவு பட்டது. இன்னொன்று முதலாளியம் முதிர்ந்து வருகையில் வரைவுபட இருப்பது.
தொடர்ந்து வரைவுபடுவது.
முதலாளித்துவமும், சோசலிசமும் முழுமையாக நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டது என்று அவர் சொல்லுகிறார்.
இந்தக் கூற்றின் தவறை இதற்கு மேல் என்னால் விளக்க முடியாது. லெனின் எழுதியது எல்லாம் சரி என்கிற அடிப்படைவாதப் போக்குக்கு எதிராக எழுதுவதே முதல் நோக்கு. லெனினிடமிருந்து எடுத்துக் கொள்ள பல விசயங்கள் இருக்கின்றன.

லெனினது முன்னணிப் படையின் முன்னணிப்படை (vanguard-ism) சிறப்புத் தேர்ச்சி அடிப்படைகளில் இயங்குவது.
இது ஒரு சமூக இயக்கமாக இருக்கும் பட்சத்தில் மிகச் சரியானதும் தேவையானதும். சமூகத்தை சோசலிசக் கட்டத்துக்குத் தயார்படுத்துவதாக அது இருக்கும்.
ஆனால் அரசியல் கட்சி, புரட்சி, அரச அதிகாரம், அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டு அங்கிருந்து சோசலிசத்தை வலிந்து வளர்த்தலுக்கு எந்தளவுக்கு உகந்த வழிமுறை என்பது உரையாடலுக்கு உரியது.
ஏனெனில் சிந்தனையைப் பற்றிய சிந்தனையை சிந்தனையைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருப்பது போல, சோசலிசத்தைப் பற்றிய அணுகுமுறையும் சோசலிசத்தைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கிறது. அந்த வேகத்துக்கு ஈடுகொடுக்கத் தயாரற்ற மக்கள் கடைசி வரையில் ஒரு அறிவுக் கூட்டத்தினரின் அடிமைகளாக, விளக்கமற்று தொடர்கிற அடிப்படைவாதிகளாக இருந்து விடுகிற சாத்தியமும் அதிகம்.
நான் லெனினையோ, ஏனைய தனிமனிதர்கள் எவரையுமோ எதிர்ப்பதில்லை (அவர்கள் என்னையோ என் அன்புக்குரியவர்களையோ தனிப்பட்ட முறையில் தாக்குகிற வரையில்). என்னுடைய பிரச்சினை லெனின், மார்க்ஸ் சொன்னவற்றை ஆய்வின்றி ஏற்கிற ஆபத்தான அடிப்படை மனநிலை பற்றியதே.
எல்லோருக்கும் தவறிழைக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். ஒருவர் தவறே இழைக்கக் கூடாதென்று எதிர்பார்ப்பது கருத்துவெளியில் அவர் மீது இழைக்கப்படுகிற பெரும் வன்முறை. லெனின் மீதான வன்முறையாகவும் இந்த அடிப்படைவாததைப் பார்க்கிறேன்.
ஒரு மானுட விடுதலைக்கான செயற்பாட்டாளரான லெனின் தன்னுடய கருத்துக்களை விளக்கமின்றி, ஆய்வின்றி ஏற்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார். அப்படி ஏற்றுக் கொள்கிறவராயிருந்தால் அவர் மானுட விடுதலைக்கான செயற்பாட்டாளரல்லர்.
லெனினிசத்தை, மார்க்சியத்தை எதை வைத்துச் சரிபார்க்கிறீர்கள் என்று கேட்டால் எனக்குப் பதில் வருவதில்லை.
இது வெளிப்படையான அடிப்படைவாதம். இதைத்தான் கடுமையாக எதிர்க்கிறேன். லெனினுடன் எனக்கு தனிப்பட்ட வாய்க்கால் தகராறு ஏதுங் கிடையாது.

// இயங்கியல் இயக்கவியல் என்ற சொற்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் தெளிவாக இல்லை.

இயங்கியலுக்கு சரியான இயற்கையே,,,

இயற்கை மற்றும் ஞமூகத்தின் பிரபலிப்பாக கருத்துக்கள் அமைகின்றன.
இயற்கையில் நடக்கும் மாற்றத்தை #இயக்கத்தை#புறநிலை_இயக்கவியல் என அழைக்கலாம். புற நிலை இயக்கத்தை அறிந்துணர்வது #அகநிலைஇயக்கவியல் எனலாம்.அந்த இயக்கம் புற நிலையின் பிரதிபலிப்பாக இருந்தாலும் #தன்னிலையாக இயங்கியலாக சிந்திக்கலாம்.
ஆனால் அது புற நிலை சார்ந்ததாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.தர்க்கபூர்வமாக கூட விளக்கலாம்.

இயற்கை சமூக இயக்கத்தை எதார்த்தமாக பிரதிபலிக்காத சூழலில் நமது அகநிலை இயக்கம் கற்பனையாக புனைவாக அமையக்கூடும்,

இதை சம்பிரதாய இயக்கவியல் மற்றும் தர்க்கவியல் என அழைப்பர்.

இப்படி தான் எதார்த்தை முழுமையாக பெரும்பான்மையாக பிரபலிக்காமல் அதில் ஒரு அல்லது சில கூறுகளை புற நிலை இயக்கத்தை கவனம் கொள்ளாமல் விளக்குவது நடக்கிறது.இந்தப் படிதான் கடந்த கலா மார்க்சிய ஆசான்களை பற்றிய மதிப்பீட்டை முன் வைக்கின்றனர்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றி லெனினியம் பற்றி
ஏகாதிபத்தியம் பற்றி என சொல்லிக்கொண்டே போகலாம்.இப்படி விளக்குவது இடதுசாரி இயக்கத்தை குறுங்குழுவாதத்தில் அராஜகவாதத்தில் கொண்டு சேர்க்கும் நிலை ஏற்பட்டு இன்றும் தொடர்கிறது.,,, //

 மார்க்சிய ஆசான்கள் என்ற பதம் எதற்கு தோழர்? பழைய குருகுல முறைக்கு நாம் மீள்வது சரியல்லவே.

 ஆசான்கள், பேராசான்கள் போன்ற பதங்கள் அறிவு வெளியில் அதிகாரப் படிநிலைகளை ஏற்படுதுவது ஏற்படுத்துகின்றனவே. எல்லாவித அதிகாரங்களுக்கும் எதிரான பதம் 'தோழர்'. தோழர்களான நாம் ஏன் அறிவுக்காக அடுத்தவரை அண்ணாந்து பார்க்க வேண்டும்.

அறிவைப் பெறுவது எமது உரிமை அல்லவா. புதிதாக அறிய வாய்ப்புக் கிடைத்தவர்கள் அதைப் பதுக்காமல் பகிர்வது அவர்களது கடமையல்லவா? இதில் எதற்காக ஆசான் மரியாதை வருகிறது?

// எல்லா அதிகார மையங்களையும் எதிர்ப்போம் என்பது பின்நவீனத்துவ பதம்,,
நமது ஆசான் என
சொல்வது குருகுல மனப்பான்மை என்கிறீர்கள்,,,முன்னவர்கள் சொன்னதிலிருந்து பின்னவர்கள் வளம் பெறுவதும் தத்துவத்தை வளர்ப்பதும் தேவை தான்,,, //

 தோழர் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.
அதிகாரத்தை அழிப்பதற்காகத்தான் (அதற்கு மட்டுமாகத்தான்) பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும் என்பதே மார்க்சியம்.

மேற்பரப்புக்கும் உள்ளடக்கத்துக்கும் ஆன முரண்பாடு பதங்களிலும் உண்டு.

தேர்தல் முறை என்கிற சனநாயக மேற்பரப்பின் உள்ளடக்கம் பாராளுமன்ற, இருகட்சிச் சர்வாதிகாரமாக இருக்கிறது.

'பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்' என்பது மேற்பரப்பில் சர்வாதிகாரமாகத் தெரிந்தாலும் உள்ளடக்கம் கீழிருந்து மேலான உண்மைச் சனநாயகமாக இருக்கிறது.
இந்தக் கீழிருந்து மேலான உண்மைச் சனநாயகப் பொறிமுறையை விளக்குங்கள் என்று கேட்டால் 'பாட்டாளி வர்க்கச் சர்வாதிகார' கோசம் எழுப்புகிறவர்கள் பதிலளிக்கிறார்கள் இல்லை.
சோசலிசக் கட்டத்துக்கான இயக்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் ஒரே நோக்கம் கீழிருந்து மேலான உண்மைச் சனநாயக இயக்கத்தை நிறுவி அதிகாரத்தை உதிரச் செய்வதே.

இந்தப் புரிதல் இல்லாத, அதிகாரத்தைக் கைப்பறுவதை மட்டும் குறிக்கோளாக்கி, புரிதலை மழுங்கடித்துக் கொண்ட சிறப்புத் தேர்ச்சியால் பாதிப்படைந்த முன்னணிப் படையினரின் முன்னணிப்படையினர் மீதே விமர்சனத்தை முன்வைக்கிறேன்.

// தோழர் நீங்கள் கற்கனையாக பேசுகிறீர்கள்,,,கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் நோக்கி கருத்துக்கள் பரவ வேண்டும் தான்,,,
முன்னணி சக்திகள் மட்டுமல்ல எல்லோரும் எல்லாமே தெரிந்தவர்களாக இருக்க முடியாது.முன்னணியினர் செய்யும் தவறை சுட்டும் அளவிற்கு கீழ்மட்டத்தில் உள்ளவரை தயார்படுத்த முடியாத நிலை தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் செயலற்று போக காரணம். //

 கருத்துக்களின் முதன்மை இயக்கம் மேலிருந்து கீழ்.
பேண்தகு செயலின் முதன்மை இயக்கம் கீழிருந்து மேல்.
ஆனால் மேலிருந்து கீழ்பாயும் கருத்து இயக்கம் அதிகார இடைமுகங்களினூடு (ஆசான், குரு, அறிவு அதிகாரி) பாய்வது அதிகார, பிழைப்புவாதத்தையும் அடிப்படைவாதத்தையும் ஒருங்கே அதிகரித்து வரும். வினைத்திறன் வெகுவாகக் குறையும்.

அதே போல் செயற்பாட்டை, சனநாயகத்தை கீழிருந்து மேலாக விதைக்காது விடின் (வேலைத்தள சனநாயகம்) அதுவும் வினைத்திறன் அற்ற அதிகாரம் மையங்களுக்கே காலப் போக்கில் வழிகோலும்.
எதைக் கற்பனை என்று சொல்லுகிறீர்கள் தோழர்?

  //தவறை சுட்டும் அளவிற்கு கீழ்மட்டத்தில் உள்ளவரை தயார்படுத்த முடியாத நிலை தான் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் செயலற்று போக காரணம்.//

இதற்கான தீர்வு வழிகளைதான் நான் மேலே முன்வைத்திருக்கிறேன்.

// இயற்கையான மாற்றமே கீழிலிருந்து மேல் தான்,,,அந்த மாற்றம் உணர்வற்றது.
உணர்வுபர்வமாக மாற்ற வேண்டும்.மேலிருந்து கீழ்
கீழிலிருந்து மேல் இரண்டும் இருக்க வேண்டும்,,,
ஆசானாக இருப்பதற்கு மாணவனாக இருக்க வேண்டி உள்ளது ஆசானாக மாற மாணவனாக இருக்க வேண்டி உள்ளது. இதில் எந்த ஒன்றை மட்டுமே அழுத்தம் தர முடியாது,, //
 தோழரே, இயங்கியல் அடிப்படைகளில் ஒன்றைச் சொல்லுவது அதன் முரண் கூறையும் சேர்த்தே சுட்டுகிறது.
ஒவ்வொரு கருத்தும் அதற்கு எதிரானவற்றையும் சேர்த்தே உருவாக்குகிறது.

ஆசான் -- மாணவர் என்பது ஒவ்வொருவரும் தாமே தமக்கு ஆசான் (பொதுப்பாலில் கொள்க) , மாணவராக இருக்கிற சிந்தனை வெளியைக் கொள்கிற கட்டமாக இருக்க வேண்டும்.
ஒருவர் இன்னொருவருக்கு மாணவராகவும் பிறிதொருவருக்கு ஆசானாகவும் (பொதுப்பாலில் கொள்க) இருக்கிற நிலையையே அதிகாரப் படிநிலை, வினைத்திறன் குறைந்தது என்கிறேன்.
நாம் தோழர்களிடையே திசைக்காக எவரிடமும் தங்காத, தானே தனக்கு ஆசான், மாணவராய் (பொதுப்பாலில் கொள்க) இருக்கிற சிந்தனையை அடையச் செய்ய ஊக்குவிக்க வேண்டும்.
அவர்களை சரியோ தவறொ சுயமாக எழுத (மார்க்சிய மூலவர்களின் கருத்துக்களை எடுத்தாண்டு, தமது விளக்க நிலைக்கேற்ப) விட வேண்டும்.
காலப் போக்கில் தனியாகவும் கூட்டாகவும் தொடர்ந்து திருத்தமடைய இதுவே உதவும்.
இதுவே சிந்தனைத் தெளிவைப் பேரியக்கமாக வளர இடமளிக்கும்.

இறுக்கி வைப்பது தவறு. தவறிழைக்கிற சுதந்திரம் எவருக்கும் உண்டு. நீங்கள் சொன்னது போல கீழிருந்து மேலானதே இயற்கையான போக்கு.
கீழிருந்து மேலான செயலறிவினூடே நாம் கோட்பாடுகள் ஆக்கி மேலிருந்து கீழாகவும் சிந்திக்கக் கற்றுக் கொண்டோம்.

// பின்நவீனத்துவாதிகள் தாக்கத்தோடு பேசுகிறீர்கள்,,,
விரிவாக பேசுவோம்,,, //
நான் பின்னவீனவாதிகளின் தர்க்கத்துடன் பேசவில்லை.

நானும் நீங்களும் ஒத்த அடிப்படைகளிலிருந்தே உரையாடுகிறோம் (கீழிருந்து மேலான இயக்கத்தின் முதன்மையில் ஒன்றுபடுகிறோம்).

ஆனால் நீங்கள் ஆசான் மாணவர்தான் சரி, அப்படித்தான் இருக்க முடியும் என்று முரண்பட்ட கருத்தை முன்வைக்கிறீர்கள்.

இங்குதான் நான் முரண்படுகிறென்.

பின்னவீனத்துவ அணுகுமுறையை என்னோடு குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.
அது எல்லாவித அதிகார மையங்களுக்கு எதிராக காலம் முந்தி இயங்கி இருக்கிற அதிகார மையங்களைக் கட்டிக் காக்கிறது.

நான் சொல்லுவது இருக்கிற அதிகார மையங்களுக்கு எதிராக இயங்குவது புதிய அதிகாரமாயிருக்காத உள்ளார்ந்த பண்பை தத்துவ, செயல் ரீதியாக விளங்கி உள்ளெடுக்க வேண்டும் என்பது.

இதைச் செய்யாது விட்டால். அடுத்து அதிகாரமேறுகிற தரப்பும் இன்னொரு சமூகப் புரட்சியை வளர்த்தெடுக்கும்.

அதிகாரத்தை அழிக்கிற பொறிமுறையை உள்ளெடுக்காத, தன்னைத்தானே உதிரச் செய்கிற திசையில் நகராத அதிகாரத்தை எதிர்க்கிற சக்திகள் மானுட விடுதலைக்கானவை அல்ல. 

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home