Tuesday, February 27, 2018

சோசலிசம் பற்றிய லெனினின் பொய்கள் - 2


சோசலிசம் பற்றிய லெனின் பொய்கள் - 1 இன் தொடர்ச்சி இது. அந்த உரையாடல் பல தோழர்களின் தர்க்கக் குறைபாட்டினால் தொடர்ந்து திசைதிருப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறது.  இது இந்தக் கூற்றுப் பற்றிய இன்னொரு சுருங்கிய விமர்சனம். இத்தோடு இதைக் கடந்து போய்விடுகிறேன்.

பதிவு 

மிகச் சுருக்கமாக லெனினுடைய கீழுள்ள கூற்றின் தவறைச் சொல்லுகிறேன். அதை மறுப்பவர்கள் என்னுடைய தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். என்னுடைய தவறுகளைச் சுட்டிக் காட்டுவது மட்டும் லெனினை நியாயப்படுத்துவதாகாது. இது எளிய தர்க்கம்.

இந்தக் கூற்றுப் பற்றிய விமர்சனத்தை லெனின் பற்றிய விமர்சனமாக்கி, லெனினுடய எல்லாப் பக்கங்களை உரையாடலுக்குள் கொண்டுவருவது பொருத்தமற்றதும், திசைமாற்றுகிற செயற்பாடும் ஆகும். எங்களுக்கு லெனின் முக்கியமல்ல. மானுட விடுதலையை விரைவுபடுத்துவதே முக்கியம். லெனினையும் மார்க்சையும் சரிபார்க்க அடிப்படையான கருவிகளை நாம் தேடிக் கைக் கொள்ள வேண்டும்.

//
உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுப் போக்கிலே , தாங்களாகவே ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக்கொள்ளும் பேச்சுக்கிடமில்லை.

ஆதலால், ஒன்றுதான் தேர்ந்தெடுக்க உண்டு.

முதலாளித்துவ சித்தாந்தம் அல்லது சோஷலிச சித்தாந்தம்.
நடுவில் எதுவும் கிடையாது.
#லெனின்.
//

தோழர்களில் பலர் தவறாகப் புரிந்து கொண்டிருப்பது போல இந்தக் கூற்றில் இருப்பது இரண்டு தத்துவங்கள்/சித்தாந்தங்கள் அல்ல.

மூன்று.

[தத்துவம் வேறு, சித்தாந்தம் வேறு என்று மறுபடி ஏதாவது திசைதிருப்பல் செய்ய வேண்டாம். எது தேவையோ அதுவே முதன்மைக் கூறாக வேண்டும்.]

சித்தாந்தம் ஒன்று: உழைக்கும் மக்கள் தமது இயக்கத்தின் நிகழ்வுப் போக்கிலே , தாங்களாகவே ஒரு சுதந்திரமான சித்தாந்தத்தை வகுத்துக்கொள்ளுவது

சித்தாந்தம் இரண்டு: தாரண்மைவாத அடிப்படைகளிலான முதலாளித்துவம்

சித்தாந்தம் மூன்று: லெனின் தனது புரிதலுக்கேற்ப இயங்கியலிலிருந்து ஆரம்பித்துக் கட்டமைத்த சோசலிச சித்தாந்தம்.

லெனினுடைய இயங்கியல் புரிதலும் ஏனையவர்களுடைய இயங்கியல் புரிதலும் ஒன்றல்ல. ஹெகல், டைஜட்சன் ( Joseph Dietzgen), மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ட்ரொஸ்கி,
ரோசா லக்சம்பேர்க், பிலேகனவ், ஸ்டாலின் கால நியமம், மாவோ (இன்னுமும் பலர்) என மிக நீண்ட பாரம்பரியமிக்க, வெவ்வேறு கோணங்கள், அடிக்கோள்களில் இருந்து எல்லாமும் இயக்கமாய், இயக்கப் பொருளாய் இருப்பதைக் கொண்டு சமூக வெளி மாற்றத்துக்கான சிந்தனைச் சட்டகங்களையும் அணுகுமுறைகளையும் ஆக்கினார்கள் . ஒவ்வொருவருடைய அணுகுமுறைகளிலும் புரிதல்களிலும் வேறுபாடுகள் உண்டு. அவ்விதம் இருப்பது இயங்கியல் பாரம்பரியத்துக்கு உகந்ததே.

நிகழ்வுப் போக்கில் "சித்தாந்தம் ஒன்று" ஏனைய இரண்டு சித்தாந்தங்களையும் மிக எளிதில் கடந்து போய் விடும் என்பதே எனது நிலைப்பாடு. அதுவே என்னுடைய விமர்சனம்.

எளிமையாக யோசித்துப் பாருங்கள். லெனின் என்கிற தனிமனிதர் இயங்கியலில் இருந்து ஆரம்பித்து வந்தடைகிற சோசலிச எண்ணக்கருக்களை விடவும், பல கோடி பாட்டாளிகள், பல நூறுவருசம் தனியாகவும் கூட்டாகவும் நிகழ்வுப் போக்குகளினூடு தொடர்ந்து திருத்தமடைகிற சித்தாந்தத்தை உருவாக்குகிற பொழுது அது லெனின் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் அவருடைய சிந்தனைகளை விடவும் மிகப் பரந்ததாக இருக்கும். அவருடைய இயங்கியல் புரிதலை விட விஞ்சிய இயங்கியல் புரிதலினூடு இது மிக எளிய சாத்தியம்.

லெனினுடைய கூற்று இந்தமுதலாவது சித்தாந்தத்தைப் போட்டியிலிருந்து விலக்கி வைக்கிறது. அப்படி வைக்காவிட்டால் தன்னுடைய மூன்றாவது சித்தாந்தம் கொஞ்சங் கூட நின்றுபிடிக்காதென்பதை லெனின் நன்கறிவார்.

இது அவருடைய அரசியல் பொய்.

உழைக்கும் மனிதர்கள் தனியாகவும் கூட்டாகவும் சித்தாந்தத்தை நிகழ்வுப் போக்குகளினூடு வளர்த்தெடுக்கவே நான் அழைக்கிறென்.

அதற்காகத்தான் நாம் ஒவ்வொருவரும் எங்களுக்கான நியமங்களை ஆக்கி, புறவயப்படுத்தி, பொதுவில் வைத்து, ஒருங்கிணைத்து (நிசமான) நட்பு-முரண்களைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறேன்.

'எங்களுக்கான நியமம்' என்பது அனைவரது நியமங்களிலிருந்தும் எடுத்தாண்டு, புதிய இணைப்புக்களினூடு வலிமையடைவதே. எங்களுக்கான நியமம் எல்லாருக்குமானதே. எல்லோரது நியமமும் எங்களுக்கானதே. அறிவு வெளியில் இதுவே பொதுவுடமை. இதுவே கீழிருந்து மேலான பேண்தகு இயக்கம்.

முரண்களைத் தீர்த்துக் கொள்வதென்பது மேம்பட்ட முரண்களை நோக்கித் தொடர்ந்து நகர்வதே.

மேம்பட்ட முரண்களை நோக்கி நகர்வதென்பது சிந்தனை வெளிக்குள் அதி வினைத்திறனுடன் முரண்களைத் தீர்த்துக் கொள்வதே.

சிந்தனையை அதன் உச்சத் திறனுக்குத் தொடர்ந்து நகர்த்த இயங்கியல் தர்க்கம் பயிலுங்கள் தோழர்களே.

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home