Wednesday, February 28, 2018

கொம்மூனிஸ்ட் அறிக்கையைத் திரித்து வாசிக்கும் நிலப்பிரபுத்துவ மனநிலை

அறிக்கையில் தர்க்கத் தவறுகள் உண்டு. அது வேறு பிரச்சினை. ஆனால் அதிகம் உடன் படுகிற கருத்துகளை அதிகம் கொண்டது. எழுபது எண்பது வீதம் வரைக்கும் உடன்படுகிறேன். இந்தப் பதிவு நிலப்பிரபுத்துவ மனநிலை மார்க்சிய எழுத்தை வாசிக்கிற பொழுதும், மொழிபெயர்க்கிற பொழுது அதனுடைய மட்டுப்பட்ட சிந்தனையால் எவ்விதம் தன்னை அறியாது திரித்து வாசித்துப் புரிந்து கொள்ளும் என விளக்குவதற்கானது. தோழர் சேனன் ‘ஆங்கில மொழி’ மூலங்களில் மார்க்சியம் வாசிக்கச் சொன்ன போது எதிர்க்கருத்து எழுதியவன் நான். நான் எதிர்த்ததன் காரணம், மார்க்சியம் என்பது வாசித்து அறிவதல்ல. இயங்கியல் அடிப்படைகளில் ஆரம்பித்து மார்க்சும் ஏனையவர்களும் வந்தடைந்த அத்தனை முடிவுகளுக்கும் வருவது. இவ் வழியில் சரிபார்ப்பது. இதில் மொழியின் பாதிப்பு இல்லை. தோழர் சேனனின் கருத்து என்னுடைய சோசலிச மனநிலை சார்பாக பிற்போக்கானது. அதனால் தவறானது. ஆனால் சோசலிச மனநிலையை வந்தடையாத, அதுவும் நிலப்பிரபுத்துவக் கூறுகளை தன்னுடைய சொந்தச் சிந்தனையிலிருந்து களையாமல் (அதற்கு முயலாமல்) தாராண்மைவாதத்தை மனித வரலாற்றில் இருந்து களைய வெளிக்கிடுறவர்கள் நிறைந்து வழிகிற தமிழ்ச் சமுகம் சார்பாக முற்போக்கானது. தமிழின் நிலப்பிரபுத்துவ மனநிலை கம மார்க்சிய மனநிலை மொழி பெயர்ப்பதை விடவும் தாராண்மைவாத கம சோசலிச மனநிலை மொழிபெயர்ப்பது திருத்தமாகிற வாய்ப்பு இருக்கிறது. நடைமுறை பெறுமதியும் இருக்கிறது. ஒரே ஒரு உதாரணந்தான் எழுதப் போகிறேன். ஆனால் மிகப் பொருத்தமானது, அதுவே போதுமானது. போதாதெனில் கிளறுங்கள், இன்னுமும் கொண்டு வந்து கொட்டுகிறேன். ஆனால் என்னுடைய நேரத்தை, உழைப்பைச் சுரண்டுவது பொருத்தமல்ல. ஒன்றுக்குக்கு மேற்பட்ட தோழர்கள் கீழ்வரும் கருத்தை முகநூலில் பகிர்ந்திருந்தனர். // இதுநாள் வரையில், மரியாதைக்கு உரியதாக இருந்த, பயபக்தியுடன் பார்க்கப்பட்டு வந்த, வாழ்க்கைத் தொழில் ஒவ்வொன்றையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துவிட்டது. அது, மருத்துவரையும் வழக்குரைஞரையும், மதகுருவையும் கவிஞரையும், விஞ்ஞானியையும் தன்னிடம் ஊதியம் பெறும் கூலி-உழைப்பாளர்களாக ஆக்கிவிட்டது. முதலாளித்துவ வர்க்கம், குடும்பத்திடமிருந்து அதன் உணர்ச்சிபூர்வ உறவுத்திரையைக் கிழித்தெறிந்துவிட்டது. குடும்ப உறவை வெறும் பண உறவாகக் குறுக்கிவிட்டது.// [1] [1] https://www.marxists.org/tamil/marx/1848/communist-manifesto/ch01.htm நான் ஒரே ஒரு தோழருக்கு மட்டும் பதில் கருத்து எழுதினேன். மற்றவர்களை விட அத் தோழருடைய தெளிவு மட்டம் ஏனைய தோழர்களை நேரடியாகப் பாதிக்கும் என்பதால். மற்றப்படி ஆரை அடிக்க வசதியோ அவரை அடிப்பவன் நான் அல்ல. மார்க்ஸ், ஏங்கல்சின் இயங்கியல் புரிதலைத்தான் அடுத்ததாக அடிக்கப் போகிறேன். அவர்களைக் காட்டிலும் வலிமையான சட்டகத்தை உருவாக்கி வருகிறேன். பயபக்தியைக் கிழிப்பதுவும், மிகிமையை இழக்கச் செய்வதும், தொழில்களைஎல்லாம் வெறும் கூலி உழைப்பாக மாற்றுவதும் முதலாளித்துவ இயக்கத்தின் முற்போக்குக் கூறு. அப்படித்தான் மார்க்சும் ஏங்கல்சும் எழுதினார்கள். என்னை நம்பாவிட்டால் கொஞ்சம் அடுத்த பத்தியை வாசிக்கலாம். “உற்பத்திக் கருவிகளையும், அதன்மூலம் உற்பத்தி உறவுகளையும், அவற்றோடு கூடவே ஒட்டுமொத்த சமுதாய உறவுகளையும் இடையறாது புரட்சிகரமாக மாற்றி அமைத்திடாமல் முதலாளித்துவ வர்க்கம் உயிர்வாழ முடியாது. இதற்கு மாறாக, பழைய உற்பத்தி முறைகளை மாற்றமில்லா வடிவில் அப்படியே பாதுகாத்துக் கொள்வதுதான் முந்தைய தொழில்துறை வர்க்கங்கள் அனைத்துக்கும் வாழ்வுக்குரிய முதல் நிபந்தனையாக இருந்தது. உற்பத்தியை இடையறாது புரட்சிகரமாக மாற்றியமைத்தலும், சமூக நிலைமைகள் அனைத்திலும் இடையறாத குழப்பமும், முடிவே இல்லாத நிச்சயமற்ற நிலைமையும், கொந்தளிப்புமே முதலாளித்துவ சகாப்தத்தை அதற்கு முந்தைய சகாப்தங்கள் அனைத்திலிருந்தும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. நிலைத்த, இறுகிப்போன எல்லா உறவுகளும், அவற்றுடன் இணைந்துள்ள பயபக்தி மிக்க பண்டைய தப்பெண்ணங்களும் கருத்துகளும் துடைத்தெறியப்படுகின்றன. புதிதாக உருவானவை அனைத்தும் நிலைத்துக் கெட்டியாகும் முன்பே காலாவதி ஆகிவிடுகின்றன. கட்டியானவை அனைத்தும் கரைந்து காற்றிலே கலக்கின்றன, புனிதமானவை யாவும் புனிதம் கெடுக்கப்படுகின்றன. இறுதியாக, மனிதன் தனது வாழ்க்கையின் எதார்த்த நிலைமைகளையும், சக மனிதர்களுடன் தனக்குள்ள உறவுகளையும் தெளிந்த அறிவுடன் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறான்.” [2] முதலாளியக் கட்டத்தின் முற்போக்குக் கூறுகள் பற்றி கொம்முனிஸ் மனிபெஸ்ட்டோ பக்கம் பக்கமாக வாயாரப் புகழ்ந்து பிற்போக்குக் கூறுகளையும் ஆழமாக விளக்குகிறது. இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் நான் மேற் சொன்ன [1] ஐப் பகிர்ந்து கொள்கிறார்கள், இரண்டு முதன்மைக் காரணங்களால் அவர்களுடைய நிலப்பிரபுத்துவச் சிந்தனைக்கு அது உவப்பாயிருகிறது ஏனைய நிலப்பிரபுத்துவச் சிந்தனைகளை ஈர்ப்பதற்கு (appeal alike) நான் மார்க்சை விட மிகத் தெளிவாக எழுதி விளக்குவதை ஏற்க மாட்டார்கள். மார்க்ஸ்தான் சொல்லியிருக்கிறார் என்று [2] ஐக் காட்டினால்தான் உவந்து ஏற்பார்கள். ‘அந்தா பார் பூச்சாண்டி’ என்று மார்க்சைக் காட்டி இவர்களுக்குச் சோறு தீத்த வேண்டி இருக்கிறது. மார்க்சை அப்படி ஆக்கி விட்டார்கள். மார்க்ஸ் எழுதினால் மட்டுமே விளங்கக் கூடியவர்களாக இருக்கிறவர்களைப் பற்றிய நிலாவின் பதிவு. அடுத்த ஒப்பீடு மொழி பெயர்ப்பு. ஆங்கில மொழியில் [1] பின் வருமாறு தெளிவாக முதாளித்துவ முற்போக்குக் கூறுகளையும் பிற்போக்குக் கூறுகளையும் பத்தி பிரித்து (விளங்கி இருக்கிறார்கள் என்று புரிகிறது) எழுதி இருக்கிறார்கள். மூலத்தில் பத்தி பிரிக்காமல் இருந்து ஆங்கில மூலத்தில் இவ்விதம் பத்தி பிரித்திருந்தால் தனியாகப் பாராட்டுவேன். //The bourgeoisie has stripped of its halo every occupation hitherto honoured and looked up to with reverent awe. It has converted the physician, the lawyer, the priest, the poet, the man of science, into its paid wage labourers The bourgeoisie has torn away from the family its sentimental veil, and has reduced the family relation to a mere money relation. // [3] [3] https://www.marxists.org/archive/marx/works/download/pdf/Manifesto.pdf, பக்கம் பதினாறு . எதையுமே மாற்றாமல் ‘உள்ளதை உள்ளபடியே’ வைத்திருப்பதே ‘திரிபுவாதிகளிடம்’ இருந்து காக்கிற நிலப்பிரபுத்துவ மனநிலையின் தவறான வழிமுறை. மதப் புத்தகம் போல, அதே பிற்போக்கான ஆண்மொழியுடன் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நான் அதைச் சொன்னால் ஏதோ எனக்கு அது மட்டுந்தான் சொல்ல முடியும், அதுதான் எனக்கு விளங்கும் என்பது போல, ஏதோ நான் ஒரு NGO மேட்டுக்குடி பெண்ணியவாதி போல ஒரு பார்வை பார்க்கிறார்கள். சோசலிசக் கட்டத்துக்கு புற தொழிநுட்பமும், அக தொழிநுட்பமும் (தருக்கச் சிந்தனை, தத்துவ சிந்தனை) அத்தியாவசிய நிபந்தனைகள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் சாரம் - நோக்கற்ற இயற்கையின் ‘நேர்மைத்தன்மை’, இயற்கை ஆய் கருவிகள், உழைப்பு, உற்பத்திச் செயற்பாடினூடு (புற தொழிநுட்பம்) தனி, சமூக சிந்தனைக்குள் (அக தொழிநுட்பமாக) கசியும் (trickle down) என்பதே. இறுகிப் போன நியமங்களைக் குழப்பி புதிய நியமங்களை (சோஷலிச) ஆக்குகிற கட்டம் முதலாளியம். முதலாளியக் கட்டம் வேண்டாம் என்பவர்கள் தத்துவ பலத்தைக் கொண்டு நியமங்களை உடைத்து, சரியான திசையில் கட்டமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். இது தனிமனித தளங்களில் ஆரம்பித்து சமூகத் தளத்துக்கு பரவும். முதலாளித்துவ முற்போக்குக் கூறுகளையே உள்ளவாங்க முடியாத மட்டான அக தொழிநுட்பம், புரட்சியைச் செய்து விட்டு அடுத்த நாள் என்ன செய்ய போகிறது. மிகப் பெரிய அதிர்ச்சி அவர்களுக்குக் காத்திருகிறது. இந்த உதாரணத்துக்கு மன்னிக்கவும். இயற்கைக்கு அணுக்கமாக இருப்பதால் நாய்களிடம் அதிக நேர்மை இருக்கிறது. இழிவாக எண்ண வேண்டாம். காரைத் துரத்துகிற நாய்களுக்கு ஒரு நாள் அதைப் பிடித்தவுடன் என்ன செய்வதென்றே தெரியாது. இது நாயின் குறையல்ல. சிறப்புத் தேர்ச்சியினால் வருகிற சிந்தனைக் குறைபாடு. கணா - 28/02/2018

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home